Breaking News

முகநூலை பயனுள்ளதாக்க என்ன செய்ய வேண்டும்?

விசித்திரமான யுகத்தில் நுழைந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
முகநூல் உலகம் பற்றிதான் சொல்கிறேன்.
எத்தனை எத்தனை விதமான விந்தை மனிதர்கள் இங்கே…. ஆஹா… வியப்பாக இருக்கிறது.
                                       Image may contain: text   
போலிகள் எச்சரிக்கை ஒருபுறம். அறிவு கொழுந்துகளின் ஆர்ப்பாட்டங்கள் மறுபுறம்.
• இப்படி வதந்திகளைப் பரப்புவோர்,
• சதா பரபரப்புகளிலேயே ஆழ்த்தி பதிவேற்றம் செய்வோர்,
• தனியான குழுக்களில் பேச வேண்டிய கருத்துக்களை பொதுத்தளத்தில் வரம்புமுறையில்லாமல்… கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் பதிவிடுவோர்,
• விமர்சனம் என்ற பெயரில் காதுகூசும் வசைமழைப் பொழிவோர்,
• தாயாக மதிக்கப்படும் மொழியை கொலை செய்வோர் என்று முகநூல் விசித்திர யுகமாகிவிட்டது.
                                     No automatic alt text available.
என்னைக் கேட்டால் நல்லவற்றை விரைந்து… கொண்டு சேர்க்க, முகநூலைவிட சிறந்த ஊடகம் வேறு எதுவுமில்லை என்பேன். அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இந்த பரிந்துரையை முன்வைப்பேன்.
முஸ்லிம்கள் என்று தனியாக விளிப்பதற்கு இந்த சொல்லாடலை நான் பயன்படுத்துவதற்கு எனது நண்பர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்.
தமது பண்பு நலன்களில் கவனமாக இருக்க வேண்டியவர்களும், கொள்கை ரீதியாகவே அடுத்தவர்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்புகள் சுமத்தப்பட்டவர்களும் முஸ்லிம்கள்தான் என்பதாலேயே இதை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியிருந்தது.
                                      No automatic alt text available.
நபிகளார் தமது தாயகமான மக்காவில் தமக்கு எதிரான கொடுமைகளின் உச்சத்தில் நாடு துறந்து மதீனா என்னும் அயலகம் செல்ல வேண்டி வந்தது. அப்போது, அண்ணலார் செய்த ஒரு பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தமது மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய பிரார்த்தனை அது.
”என் இறைவனே..! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் வாய்மையுடன் கொண்டு செல்வாயாக..! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக!”

உண்மையாக இருத்தல். உண்மையே பேசுதல். உண்மையையே எழுதல் என்று தனது அத்தனை நடவடிக்கைகளையும் வாய்மை என்னும் நேர்க்கோட்டில் அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையின் போக்கை சீர்ப்படுத்தும் ஆளுமைப்பண்பு இது. வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தும் உந்து சக்தி.
முகநூலை மதிப்புள்ளதாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் இவை:

• சொந்த அடையாளங்களுடன் இருங்கள். இதனால் போலிகள் தவிர்க்கப்படுவர்
• முகநூலுக்கு அப்பால் நிஜ உலகம் ஒன்றுண்டு என்பதால்… நிறைய வாசியுங்கள். வாசிப்பில்லாமல் அறிவு பெற முடியாது. அறிவில்லாமல் செயல்படவே முடியாது என்பதை நன்குணருங்கள்.
• அவற்றின் உண்மை தன்மை அறியாமல் எந்த செய்தியையும் பரப்பாதீர்கள். வதந்திகள் பெருத்த தீமை விளைவிப்பதால் அது கொலையைவிட கொடியதாகும்.
• ஒரு பரபரப்புக்கு பிறகு மறு பரபரப்பு வருமாதலால் அதனால் எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
• சமயம் சார்ந்த சர்ச்சைமிகு கருத்துக்களை தயவுசெய்து தனியான குழுக்களில் பதிவேற்றுங்கள். பொதுவெளியில், அவை குழப்பம் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
• பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரை மதியுங்கள்.
• விமர்சனங்கள் உங்கள் முன்னேற்றத்துக்கான மைல் கற்கள் என்பதை உணருங்கள். அதனால், அவற்றை பொறுமையாக செவிமடுத்து கேளுங்கள். அந்த விமர்சனங்கள் உண்மையிலேயே நியாயமற்றவை, உங்களை திசைத் திருப்புபவை என்றால் அந்நிலையில் மென்மையும், மௌனமுமே மேல்.
• ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட தேர்ச்சி பெற்ற வாசிப்பினால்தான் மொழியும், அதன் நடையும் செம்மைப்படுகிறது. நமது கருத்துக்களை அடுத்தவர் உள்ளங்களில் மேடையமர்த்திக் கொள்ள முடிகிறது. தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதோர் தயவு செய்து கூச்சமில்லாமல் அதை கற்றுக் கொள்ள முயலுங்கள். சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதப் பழகுங்கள். பிழைத்திருத்தம் செய்யுங்கள். தாய்க்கு ஒப்பான மொழியை தயவுசெய்து கொலை செய்யாதீர்கள்.
• முகநூல் ஒருகாலும் பொழுதுபோக்குக்கானது அல்ல. அரட்டை அரங்கமும் அல்ல. நன்கு, பயனுள்ளதாக்கிக் கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் நல் வாய்ப்பு என்பதை உணருங்கள்.
• நண்பர்களை தேர்வு செய்யும்போது அவர்களின் முகநூல் பக்கத்துக்கு சென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள். ஏற்கனவே அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்போர் எத்தகையோர் என்பதை கவனியுங்கள். தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• நன்மையானவற்றில் கொள்கை, கோட்பாடுகள், சமயங்கள் கடந்து ஒன்றிணைந்து செயல்படுங்கள்.
• உங்களது நட்பு வட்டத்தில் பெண்கள் இருந்தால்… அவர்களை உங்களின் கண்ணியத்துக்குரிய சொந்த சகோதரிகளாக கருதுங்கள். தேவையில்லாமல் அவர்களின் அந்தரங்களில் நுழையாதீர்கள். தவிர்க்க இயலாத சில நேரங்கள் தவிர மற்றைய நேரங்களில் இன்பாக்ஸில் செல்லாதீர்கள்.
• கடைசியாக, காலம் எவ்வாறு செலவழிந்தது என்பது கேள்விக்குட்பட்டது. தகுந்த பதில் அளிக்காமல் இறைவனின் திருச்சந்நிதியிலிருந்து நம்மால் நகரவே முடியாது என்பதில் கவனமாக இருங்கள்.

தகவல் 
முகநூல் பக்கம்
 : 
Ikhwan Ameer (இக்வான் அமீர்)