Breaking News

சீன நிலநடுக்கத்தில் 400 பேர் பலி: 1,400 பேர் படுகாயம்!


பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர், 1,400 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியான யுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷடோங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தைவிட்டு மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.



நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் குழாய்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை சுமார் 400 பேர் பலியாகியுள்ளதாகவும், 1400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கி இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 180க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மைக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

No comments