Breaking News

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் இணையங்கள்! - பத்து இலட்சம் பேர் பார்க்கும் செய்திகள்!

பேனா வைத்திருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆனதுபோல், கணினி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களாக மாறிவிடும் காலம் இது. எது உண்மை, எது பொய் என்ற எந்தவித அக்கறையும் ஆய்வும், பொறுப்புணர்வுமின்றி ஒரு செய்தியை தாங்கள் விரும்பியது போல் வெளியிடும் தன்னிகரற்ற உரிமையை இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் கொண்டிருக்கின்றார்கள்.


செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு பூதாகரமாகி ‘காகம் காகமாக வாந்தியெடுக்கும்’ நிலைமை இன்று தமிழர்களிடையே தலைவிரித்தாடுகின்றது. இதற்குள் இருந்து மீண்டெழ முடியாதபடி இன்றைய நவீன உலகத்தில் தகவற் பரிமாற்றம் என்பது வியாபித்திருக்கும்போதும், எது சரி - எது தவறு என்பதை மக்கள்தான் தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்தருந்தும் அன்னம் போல் சரியானவற்றை கண்டறிந்து உள்வாங்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று இன்றைக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்துவிட்டார்கள். இன்று இணையங்களில் வெளியாகும் படங்கள் பல உருமாற்றம் செய்யப்பட்டவை. அல்லது அந்தச் செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லாதவை என்பதைக்கூடக் குறிப்பிடாமல் வெளியிடுகின்றார்கள். கணினி வரைகலை மூலம் ஒரு படத்தை தேவைக்கு ஏற்றதுபோல் மாற்றியமைக்க முடியும். தவறான செய்திகளைக் கொடுக்கும் ஊடகங்கள், அந்தச் செய்தியை நம்பவைப்பதற்காகத் தவறான படங்களையும் இவ்வாறு உருமாற்றம் செய்து இணைக்கின்றார்கள்.

கண்ணால் காணும் அந்தப் படங்கள் அந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவைதான் என்பதை நம்பவைப்பதுபோல் அவை உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதனை ஆராய்ந்து பார்க்கும்போதே அதன் உண்மைத் தன்மை புலப்படும்.

காதால் கேட்கும் ஒலிப்பதிவுகளும் அவர்கள் உரையாடியதுபோன்றே இருக்கும். ஆனால், இன்றைய தொழில்நுட்பத்தில் குரலைத் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைக்க முடியும். அவ்வாறு முடியாவிட்டாலும், மனிதர்களே இன்னொருவர் போன்று தமது குரலை மாற்றிப்பேசும் வல்லமையைக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் செய்திகளின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கின்றது.

அத்துடன், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் பல இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். தாயகத்தில் வாழும் தமிழர்களை விட புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகளவாக கணினிகளையும், செல்பேசிகளையும் இணைய ஊடகங்களைப் பார்வையிடுவதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். 

எனவே, ஒரு செய்தியை இலட்சக் கணக்கானவர்கள் பார்க்கின்றார்கள் என்று நம்பவைப்பது இலகுதான். தங்கள் இணையங்களை இத்தனை பேர் பார்த்தார்கள் என்பதை நம்பவைப்பதற்காக தமிழ் இணைய ஊடகங்கள் இன்று பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்கின்றார்கள்.

இதன் ஊடாகத் தங்கள் இணையத்தளத்தை பிரபல்யப்படுத்துவதுடன், விளம்பரங்களை அதிகளவில் பெற்றுக்கொள்ளவும் முயல்கின்றார்கள். இவ்வாறு தமிழர்களை ஏமாற்றும் தமிழ் ஊடகங்கள் இன்று அதிகளவில் இருக்கின்றன. ஒவ்வொரு செய்தியிலும் அல்லது அறிவித்தல்களிலும் இதனை இத்தனை பேர் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கையை காண்பிக்கும் இலக்க ஓட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். 

இதில் எத்தனை பெரிய ஏமாற்று வேலைகள் இருக்கின்றன என்பதை கணினித் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொண்டவர்களே அறிந்துகொள்ளமுடியும்.


சாதாரணமாக ‘யூரியூப் Youtube’ போன்ற சர்வதேச இணையங்களில் ஒரு கணினியில் இருந்து ஒருவர் எத்தனை தடவைகள் உள்நுழைந்து ஒரே காணொளியைப் பார்வையிட்டாலும் அது ஒரு தடவைதான் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆனால், தமிழ் ஊடகங்களில் இந்த எண்ணிக்கை அவ்வாறில்லை. ஒருவர் செய்தியைப் பார்த்தேல பத்துப் பேர், நூறு பேர் பார்த்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தமுடியும். 

ஆரம்பத்திலேயே அந்தச் செய்தியோ அறிவித்தலோ பதிவேற்றப்படும்போது இத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கையில்தான் தொடங்கப்படும். பின்னர் தேவைக்கேற்றதுபோல் யார் வேண்டுமானாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
உதாரணத்திற்கு இவ்வாறு எண்ணிக்கையை வைக்கும் செய்திக்குள்ளோ அல்லது ஒரு அறிவித்தலுக்குள்ளோ நுழைந்து உங்கள் விசைப் பலகையில் (Keyboard) உள்ள F5 என்ற இலக்கத்தை அழுத்துங்கள். அந்த எண்ணிக்கை எவ்வளவு வேகமாக ஒடுகின்றது என்பது உங்களுக்கே புரியும். இந்த F5 கட்டையை தொடர்ந்து சில விநாடிகள் அழுத்திக்கொண்டே இருந்து பாருங்கள். ஒரு நிமிடத்தில் இலட்சம் பேர் பார்த்ததாக அது காண்பிக்கும். இப்படித்தான் சில தமிழ் ஊடகங்கள் தங்கள் செய்தியை பத்து இலட்சம் பேர் பார்த்ததாக, தாங்கள் பிரசுரித்த அறிவித்தலை 50 ஆயிரம் பேர் பார்த்ததாக ஏமாற்றுகின்றார்கள்.

ஆனால், அந்த இணையம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை, அதன் தரம் மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடும்போது எவ்வாறு இருக்கின்றது என்ற உண்மையான தகவலை அறிய நீங்கள்Alexa.com என்ற இணையத்தளத்திற்குச் சென்று, நீங்கள் அறிய விரும்பும் இணையத்தின் பெயரைக் கொடுத்தால்போதும் அது உண்மையைச் சொல்லிவிடும்.

அன்புள்ள வாசகர்களே மேல் சொன்ன இணைய தளத்திற்கு சென்று வி.களத்தூர் வலைதளங்களின் நிலைமையை அறிந்து கொள்ளவும் ,மேலும் தினகரன் ,தட்ஸ் தமிழ் போன்ற பெரிய வலைதளத்தின் நிலைமையும் அறியவும் . . .