ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு
அல்லல் கார்டாகவே தெரிகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு
புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது
மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.
இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும்,
எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம்.
பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு
அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல்
கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு
கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில்
பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற
விரும்பவில்லை.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன்
கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது
புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று
மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை
பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது
ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை
உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக
இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும்
கட்சியான பா.ஜ.க.
கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான
பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று
அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள்
வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று
சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது
புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும்
என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று
முதல் கேள்வி கேட்கப்படுகிறது.
அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு
இல்லையென்றால் எந்த சலுகையும் பெற
முடியாது என்ற நிலை உருவாகலாம்.
இதனால் ஆதார் கார்டை பெற மக்கள்
ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி
இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா
அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல
அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா
கூட்டம். ‘விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
கொடுத்துவிட்டு செல்லுங்கள்… புகைப்படம்
எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில்
அனுப்புகிறோம்’ என்று பதில் சொல்கிறார்கள்
வருவாய் துறையினர். ஆனால் பல
மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு
இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால்
வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும்
நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு
அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி
வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர்
அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும்
என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள்
மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி
இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார்
கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று
தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள
ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில்
கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு
இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை
ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும்
சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால்
இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார்
கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல
அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில்
கேட்டோம். அவர்கள் கூறுகையில், “ஆதார் கார்டு
இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை
ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட
வதந்தி. அப்படி எதுவும் நாங்கள்
அறிவிக்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார்
கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில்
இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில்
கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து
விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள்
இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய
வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்
கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம்
கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும்
பயப்பட தேவையில்லை” என்றனர்.


கருத்துகள் இல்லை