Breaking News

3 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தாமரைக்குளம்


நாகை,அக்.20: நாகையில் 3 ஆண்டுகளாக வறண்டு போன தாமரைக்குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை வெளிப்பாளையம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தாமரைக்குளம் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 4 படித்துறைகளுடன் தாமரைக்குளம் பிரமாண்டமாக உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிழிவின் போது நாகை புதிய கடற்கரையில் இருந்த சிறுவர் பூங்கா முற்றிலுமாக அழிந்தது. இதனால் வயதானவர்கள், சிறுவர்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு இடமும் அழிந்தது.

மேலும் பேரழிவின் காரணமாக பொதுமக்கள் புதிய கடற்கரைக்கு செல்லவே அஞ்சினர். எனவே தாமரைக்குளத்தை தூர்வாரி சுற்று சுவர்களை பலப்படுத்தி சுற்றிலும் நடைபயிற்சிக்கு ஏற்ப பாதையும், அதன் முன் சிறுவர் பூங்காவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியின்போது சுமார் ரூ.3 கோடி மதிப்பில் தாமரைக்குளம் அழகுப்படுத்தப்பட்டது. 

                                       

நடைப்பயிற்சி தளம், சிறுவர் பூங்கா, மரம் செடிகள் நடப்பட்டு ரம்மியமான தோற்றத்துடன் தாமரைக்குளம் மாறியது. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல வகை மீன்கள் தாமரைக்குளத்தில் விடப்பட்டன. ஆனால் இன்றைக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், தாமரைக்குளம் வறண்டு சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாக மாறி விட்டது. முட்புதர்கள் மண்டி அழகு குன்றி போய் உள்ளது. எனவே தாமரைக்குளத்தை உடனடியாக சீரமைத்து உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தாமரைக்குளம் சீரமைக்கப்படவில்லை. எனவே தாமரைக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.