Breaking News

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கண்டு ரசிக்க கண்காணிப்பு கோபுரம்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை



வேதாரண்யம்,அக்.25: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை காண கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்லும். இந்த ஆண்டு தற்போது ஆரிட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும் உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நைஜீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், 


ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால் நாரை, பர்மாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகை பறவைகள்  என 247 வகை பறவைகளும் ஆண்டு தோறும்  வந்து செல்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பறவைகளை கண்டு மகிழலாம். இந்த பறவைகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே வெகுதூரத்தில் உள்ள பறவைகளை காண பறவைகள் சரணாலயத்தில் இரண்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும்.  அதில் பெரிய டெலஸ்கோப் நிறுவி பெரிய பறவைகளை காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பறவைகள் சரணாலய பகுதி ஆரம்பம் ஆகும் பம்ப் ஹவுஸ் அருகே அடிப்படை வசதியில்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
 

அங்கு கழிவறை அமைக்க வேண்டும். பறவைகளை காண செல்லும் சாலைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை அனைத்தும் பெயர்ந்து தற்போது மண் புழுதி சாலையாக காணப்படுகிறது. எனவே மீண்டும் அந்த சாலையை அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் உணவிற்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் விடுதி மற்றும் உணவகம் அமைக்க வேண்டும். ஏரி தூர்வாரப்படாததால் தூர்ந்து போய் உள்ளது. ஏரி தூர்ந்து போய் தண்ணீர் தங்காததால் தற்போது அந்த பகுதியில் பறவைகளை காண முடியவில்லை. எனவே அந்த ஏரியை ஆழப்படுத்தி பறவைகள் தங்குவதற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.