Breaking News

சென்னை படித்த இளைஞர்களுக்கு இலவச ஜிஎஸ்டி திறன் மேம்பாட்டு பயிற்சி


சென்னை: தமிழகத்தில் படித்து வேலையில்லாமல் வாடும் இளைஞர்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடிய ஸ்டோர் மேனேஜ்மென்ட் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: சென்னை அம்பத்தூர், மகாகவி பாரதியார் நகர் (டன்லப் அம்பேத்கர் சிலை அருகில்) சரஸ்வதி வித்யாலயா பள்ளியில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் இணைந்து படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

                                                  
வருகிற 23ம் தேதி ஜிஎஸ்டியுடன் கூடிய ஸ்டோர் மேனேஜ்மென்ட் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40க்குள் இருத்தல் அவசியம். ஜிஎஸ்டியுடன் கூடிய ஸ்டோர் மேனேஜ்மென்ட் பள்ளியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பிளஸ் 2 சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவை 2 நகல்கள் வீதம் விண்ணப்பத்துடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும். 

                                   
பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். பயிற்சி காலம் இரண்டரை மாதம். பயிற்சி முழுவதும் இலவசம் என்பதால் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முழுநேர பயிற்சி என்பதால் பயிற்சிக்கு வந்து போக தினசரி போக்குவரத்துக் கட்டணம் ரூ.100 இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், தமிழக அரசு சான்றிதழ் வழங்கியதும் வேலைவாய்ப்புக்குரிய அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.